கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Monthly Archives: February 2011

கிரிக்கெட் …

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஆரம்பித்து கிட்டத் தட்ட 10 நாட்கள் ஆகி விட்டது. “டே நாட் அவுட் டா அது”, “நோ பால் டா”, “எங்க ஸ்கோர் 20 டா”, “யே அது சிக்ஸ்ஸு” என்று அனைவரும் தெருக்களிலும், கிரவுண்டுகளிலும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதையும், விளையாடிக் கொண்டு இருப்பதையும் நாம் எப்போதும் காணலாம். ஆனால் அடுத்த இரண்டு மாதம் ஹனி மூன் பீரியட் மாதிரி. கிரிக்கெட் விளையாட்டு பீக்கில் இருக்கும். இதைப் போலவே தான் 15 வருடத்திற்கு முன் நாங்களும் ஆரம்பித்தோம். 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடக்க விழாவின் போது ‘இவன் தான் பேப்பர்ல அடிக்கடி வர்ற, நாடே கொண்டாடும் சச்சினா’, என்று சுருள் பரட்டை முடியுடன் இருந்த ஒருவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. கிரிக்கெட் என்றால் சச்சின் தான் எங்களுக்கு அந்த வயதில். இந்த வயதிலும் அப்படித் தான்.

அதன் பிறகு கிரிக்கெட் கடவுள் சச்சின் சம்பந்தப்பட்டது எதுவாக இருந்தாலும் பிடிக்க ஆரம்பித்திருந்தது. இதனாலே MRF Tyres, Pepsi, Boost என்று அந்த லிஸ்ட் செல்லும். சச்சின் விளம்பரப்படுத்திய பொருட்கள் நல்லா இருக்கோ இல்லையோ ஆனா அந்தப் பொருளை எல்லாம் நாங்க பயன்படுத்தறதுல ஒரு பெருமை. சச்சின் சரியாக ஆடவில்லை என்றால் வருத்தப்பட்டு டி.வி யை ஆப் செய்யும் அளவுக்கு சச்சின் வெறியர்களாக இருந்தோம்.

இந்தியா ஜெயிக்குதோ தோக்குதோ, சச்சின் நல்லா ஆடுனா போதும் என்று நினைக்கும் அளவிற்கு தேச பக்தர்கள் நிரம்பிய கூட்டம் எங்களுடையது. 2011 உலகக் கோப்பை தான் சச்சின் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். சச்சினுக்கு மட்டும் வயசு ரிவர்சில் போகக் கூடாதா என்று தோன்றுகிறது. கால ஓட்டத்தில் நிறைய பேர் சச்சினைப் பார்த்து கிரிக்கெட் பழகி இந்தக் காலத்து சிறுவர்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த உலகக் கோப்பையில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக நான் கருதும் அணிகள் இந்தியா, தென் ஆப்ரிக்கா, சிறிலங்கா, பாகிஸ்தான் ஆகியவை. ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவில் சில வீரர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சிலர் சொல்லிவிடுவார்கள் இது தான் நான் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை என்று. பலர் உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்த பின் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதைப் போலவே இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்த பின் காணாமல் போகப் போகும் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் பீல்டில் ரசித்த பலரை இனிமேல் வர்ணனையாளராகவோ, கோச்சாகவோ, அம்பயராகவோ, match analyst ஆகவோ பார்க்கப் போகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

1996 உலகக் கோப்பை – நானெல்லாம் கிரிக்கெட் விளையாடக் காரணமாக இருந்தது. முதன் முறையாக அப்போது முழு வீச்சில் மட்டையை தூக்க ஆரம்பித்து, இந்தத் தள்ளாத வயதிலும் விளையாடிக் கொண்டு இருக்கிறேன் (ஆனால் அவ்வப்போது). 1999 உலகக் கோப்பை – நத்திங் ஸ்பெஷல், கிரிக்கெட்டுடன் ஒன்றிப் போய் இருந்த காலம். 2003 உலகக் கோப்பை – நான் B.E படித்த கால கட்டத்தில் நடந்த ஒரே ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. அந்த சமயத்தில் ‘இந்த வேர்ல்ட் கப் தான் நான் ‘படிக்கும்’ போது பாக்குற கடைசி வேர்ல்ட் கப், அடுத்த வேர்ல்ட் கப் பாக்கும் போது வேலைக்கு போயிட்டு இருப்பேன்’ என்று நினைத்து மொக்க்க்க்கை வாங்கினேன். ஏன் என்றால் அடுத்த உலகக் கோப்பை நடந்த 2007 ஆம் வருஷமும் நடிகர் முரளி, தாமு போன்று ஸ்டூடண்ட்டாகவே இருந்தேன். ஒரு வழியாக 2011 உலகக் கோப்பை தான் நான் வேலைக்கு போய்க் கொண்டே பார்க்கும் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்னும் பெருமையை அடைந்ததுள்ளது.

கொசுறு::

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான் நான் bachelor என்னும் designation ல் இருந்து பார்க்கும் கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்று (மறுபடியும்) நினைத்துக் (!!!) கொண்டிருக்கிறேன் ??? 🙂

காய்ச்சல் …

கண்ணனுக்கு உடம்பு சரியில்லாமல் போய் இன்றோடு மூன்றாவது நாள். தொண்டை ஒரு மாதிரி இருந்தது இரண்டு நாட்களுக்கு முன். தற்போது மூக்கு ஒழுகல், வறட்டு இருமல், தலைவலி கூடவே காய்ச்சல் வேறு. நேற்று மதியத்தில் இருந்து அவனைப் போட்டு வாட்டி விட்டது. சென்னைக்கு பொறியியல் படிக்க வந்த மூன்று வருடத்தில் இப்போது தான் முதல் முறையாக அவனுக்கு இவ்வளவு மோசமாக உடம்பு சரி இல்லாமல் போய் இருக்கிறது. ‘எந்த நோய் வேணும்னாலும் வரலாம், ஆனா யாருக்கும் காய்ச்சல் மட்டும் வரவே கூடாது டா சாமி’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் பொறியியல் தெரிந்த அளவு அவனுக்கு மருத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பு  இல்லை. இந்தக் காய்ச்சல் வரக் காரணம் த்ரோட் இன்பக்சன் தான் என்பது அவனுக்கு தெரியாது.

காய்ச்சல் இருந்தால் சுடு தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியும், ஆனால் சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்க ஆளும் இல்லை, அடுப்பும் இல்லை. அவனுடன் தங்கி இருக்கும் கிருபா,  “என்னடா எப்படி இருக்கு உடம்பு, இன்னைக்காவது காலேஜ் வருவியா” என்று கேட்டான் அசைன்மன்ட் நோட்டை பேக்கில் வைத்துக் கொண்டே. பதில் இல்லை. “ஊருக்கு போகலான்ல” என்று கிருபா கேட்டதற்கு, மறுபடியும் பதிலே இல்லாததால், “டே உன்னத்தான்… ஊருக்கு போகலான்ல” எனத் திரும்பக் கேட்டான். மண்டையை ஆட்டினான் கண்ணன்.

கிருபாவும் காலேஜுக்குப் போய் விட்டான். ரூமில் ஆள் இல்லாமல் தனியாக இருப்பது எரிச்சலாக இருந்தது. ஊருக்குப் போகலாம் என்றால் இந்த சமயம் பார்த்து கடந்த மூன்று நாட்களாக அவன் அம்மாவும் ஊரில் இல்லை. அக்காள் வீட்டிற்கு சென்றவள் இன்றிரவு தான் வருவாள் என்பதை மூன்று நாட்களுக்கு முன் பேசிய போது சொன்னாள்.

மேலே சீலிங்கில் மிகவும் மெதுவாக ஓடிக் கொண்டிருந்த பேனை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல வலது புறம் சாய்த்துப் படுத்தான். கண் விழித்துப் பார்த்த போது தண்ணீர் வற்றிப் போன ஒரு ஓடைக்கு ஓரமாகப் படுத்துக் கிடந்தான். எந்த இடம் என்று சுற்றிப் பார்த்தான். சிறிது தூரத்தில் பனை மரங்கள் அசைவில்லாமல் அமைதியாக நின்றிருந்ததைப் பார்த்தவுடன்,  ‘ஓ, குதிர வாய்க்காலா’ என்று தனக்குத் தானே சொல்லிகொண்டான். எழுந்து அமர்ந்த கொஞ்ச நேரத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்ததை உணர்ந்தான். சுற்றி யாரும் இல்லை. உடல் சூடாகி வியர்க்க ஆரம்பித்தது. கழுத்து வலித்தது.

“அஹ்” என்ற முனகலுடன், கண்ணைத் திறந்து பார்த்தான். இன்னும் ரூமில் தான் படுத்து இருந்தான். ‘அடச்சே, கனவா’ என்று சலித்துக் கொண்டு பக்கத்தில் வைத்திருந்த மொபைலில் மணி பார்த்தான். பதினோரு மணி ஆகி விட்டிருந்தது. அந்த பத்துக்குப் பத்து ரூமில் புழுங்க வாடை அடிக்க ஆரம்பித்ததை உணர முடிந்தது கண்ணனால். மெதுவாக எழுந்து பிரட் பாக்கட்டைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தான்.நாலு ஸ்லைஸ் சாப்பிட்டு, கொஞ்சம் போல குடத்தில் இருந்த தண்ணீரைக் குடித்தான்.

மறுபடி மெல்லிய குளிர் ஆரம்பித்தது. போர்வைக்குள் புகுந்து கண்ணை மூடினான். எழுந்து பார்த்த போது மணி மூன்று ஆகி விட்டிருந்தது. ஊருக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டு அம்மாவுக்குப் போன் செய்தான். பத்தாவது முறையாக, “நாட் ரீச்சபிள்” என்று ரிக்கார்டட் வாய்ஸ் சொன்னது. உடம்பு வலியுடன் மெதுவாக  பஸ் ஸ்டாப் போய் சென்ட்ரல் செல்லும் பஸ் ஏறினான்.

ஒரு ஆட்டோ பிடித்து அரக்கோணம் பஸ் ஸ்டாண்ட் சென்ற போது மணி ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. பக்கத்தில் யாரோ ஒருவர்  “கதிரு, நான் கல்யாண மண்டபத்துக்கு ஒரு ஏழரை மணிக்கு வந்துருவேன்” என்று செல் போனில் கத்திக் கொண்டு சென்றதை எரிச்சலுடன் பார்த்தான். எல்லா பஸ்களிலும் கூட்டம். நிற்க்கக் கூட இடம் கம்மியாக இருந்தது. நிறைய பட்டுப் புடவைகள், வெள்ள சட்ட வெள்ள வேட்டிகள் நின்று கொண்டிருந்தனர். கண்ணன் வேலூர் செல்லும் பஸ்ஸில் சோளிங்கர் செல்வதற்கு ஏறினான்.

பஸ்சிற்குள் ஒரே தள்ளு முள்ளு. ‘உட்கார்ந்தால் தேவலாம்டா’ என்று கண்ணன் உடம்பு சொன்னது. கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவனை நெருக்கித் தள்ளி விட்டு அவன் முன்னால் வந்து நின்றாள் ஒரு பெண். தன்னுடைய குழந்தையை சீட்டில் உட்கார்ந்து இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு கண்ணனுக்குப் பக்கவாட்டில் நின்றாள்.

கூட்டம் மேலும் அதிகமாகி சுற்றி நின்ற அனைவரும் இவனை நெருக்க ஆரம்பித்தனர். வறட்டு இருமலும் அவ்வப்போது வந்து போனது. உடல் சூடு அதிகமாக ஆரம்பித்தது. கண்ணை மூடியவாறு நின்று கொண்டிருந்தவனை திடீரென்று அந்தப் பெண் கூப்பிட்டாள், “தம்பி,  தம்பி”, கண்ணை விழித்து “உம்” என்றான். “உடம்பு சரி இல்லையா” என்று கேட்டாள். “ஆமாங்க” என்று முனகினான். அவன் தலையையும், கழுத்தையும் தொட்டுப் பார்த்து “அச்சச்சோ, ஜுரம் அடிக்குது… தனியாவா வந்திருக்க” என்றாள். “உம்” என்றான் கண்ணன். அவள் சட்டென்று, பக்கவாட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் “ஏம்மா , இந்தப் பையனுக்கு உடம்பு சரியில்ல ஜுரம் அடிக்குது, உக்கார எடம் கொடேன்” என்று சொல்லி இடம் வாங்கிக் கொடுத்தாள். “உக்காந்துக்கோப்பா… ஏன் தனியா வர்ற, ஒடம்பு சரியில்லாதப்ப” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோது போது கண்ணீர் கண்ணன் கண்ணை மறைக்க ஆரம்பித்து இரண்டொரு நொடிகளுக்கு மேல் ஆகி இருந்தது.